The intention of this blog is only to share the collections. Inadvertently if any file is under copyright, please intimate me so that it can be removed forthwith.
Showing posts with label Amma. Show all posts
Showing posts with label Amma. Show all posts

Sunday, June 7, 2026

Can The GEN Z kids experience this !!i

 அப்பா கட்டிய வீடாயிருந்தாலும்

அது நமக்கு அம்மா வீடுதான் !
அடுப்படியே
அம்மாவின்
அலுவலகம் !
அன்பு மட்டுமே
எதிர்பார்க்கும் சம்பளம் !
காய்ச்சல் வந்தால்
மருந்து தேவையில்லை !
அடிக்கடி வந்து
தொட்டுப்பார்க்கும்
அம்மாவின் கையே
போதுமானது !
இவ்வளவு
வயதாகியும்
புதுச்சட்டைக்கு
மஞ்சள்வைத்து
வருபவனைக்
கேலி செய்யும்
நண்பர்களே ..........
அது,
அவன் வைத்த
மஞ்சள் அல்ல !
அவன்,
அம்மா வைத்த
மஞ்சள் !
டைப்பாய்டு வந்து
படுத்த அம்மாவுக்கு
'சமைக்க முடியவில்லையே'
என்கிற கவலை !
'அம்மா தாயே'
என்று
முதன் முதலில்
பிச்சை கேட்டவன்
உளவியல் மேதைகளுக்கெல்லாம்
ஆசான் !
எந்தப் பொய்
சொல்லியும்
அம்மாக்களை
ஏமாற்றிவிடமுடியும்
'சாப்பிட்டு விட்டேன் '
என்கிற
அந்த ஒரு பொய்யைத்தவிர !
அத்தி பூத்தாற்போல
அப்பனும்
மகனும்
பேசிச்சிரித்தால்
விழாத தூசிக்கு
கண்களை தேய்த்துக்கொண்டே
நகர்ந்து விடு்கிறார்கள்
அம்மாக்கள் !
வெளியூர் செல்லும்
பிள்ளைகளின்
பயணப்பைக்குள்
பிரியங்களைத்
திணித்து வைப்பவர்கள்
இந்த அம்மாக்கள் !
பீஸ் கட்ட
பணமென்றால்
பிள்ளைகள்
அம்மாவைத்தான்
நாடுகின்றன ........
காரணம்,
எப்படியும்
வாங்கிக் கொடுத்துவிடுவாள் !
அல்லது
எடுத்துக் கொடுத்துவிட்டு
திட்டு வாங்கிக்கொள்வாள் !
வீட்டுக்குள்
அப்பாவும்
இருந்தாலும்
அம்மா என்றுதான்
கதவு தட்டுகிறோம் !
அம்மாக்களைப்
பற்றி
எழுதப்பட்ட
எல்லா
கவிதைகளிலும்
குறைந்தபட்சம்
இரண்டு சொட்டுக்கண்ணீர்
ஈரம் உலராமல் !
அகில உலக
அம்மாக்களின்
தேசிய முழக்கம்
இதுதான் ..........
" எம்புள்ள
பசி தாங்காது! "
courtesy: P. chockalingam





Thursday, June 4, 2026

Will GEN Z girls accept this ?

 


*ப்ளீஸ்*

என்று ஒத்த வார்த்தை சொன்னாலே உருகி கரைந்து விடுவார் என் அப்பா..

ஆனால் அம்மா அப்படி இல்லை.. இரும்பு மனுஷி.. ஒரு காரியத்தை அவரிடம் சாதித்து கொள்வது லேசுபட்ட விஷயம் இல்லை.. மண்டியிட வேண்டும், கெஞ்ச வேண்டும், மிஞ்ச வேண்டும், அப்பா வரும்வரை தூங்காமல் காத்திருந்து புகார் சொல்ல வேண்டும்.. எதுக்குமே மசிய மாட்டார்!!

கோபம் தலைக்கேறி அழுது புலம்புவதை தவிர நான் வேறு என்ன செய்ய முடியும்? கடைசியில்தான் தெரியும் நான் விரும்பியது 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத ஒன்றாக இருந்திருக்கும்..

இப்படி அம்மாவின் பல கண்டிப்புக்களும், திட்டுக்களும் என்னை மீட்கவே செய்தது பிரமிப்பின் நீளம்!! வசவுகள் எல்லாமே எனக்கு தடுப்பு வேலிகளாகவே இருந்திருக்கிறது.. இறுதியில் தோற்று போனது ஒன்றுக்கும் உதவாத என் பிடிவாதமாகத்தான் இருந்திருக்கிறது!!

கிச்சனில் அம்மா வியர்க்க விறுவிறுக்க எங்களுக்காக சுயமரியாதையை தொலைத்து நின்றிருந்த தருணங்கள் ஏராளம்.. *துணி காயப்போடு,*

*பீரோவை அடுக்கி வை..*

*மதியானத்தில் தூங்காதே..*

*எப்ப பாரு என்ன டிவி?*

*புக் எடுத்து படி...*

*வீட்டு வேலை செய்*,

கல்யாணம் பண்ணி போற இடத்துல என்ன நினைப்பாங்க, சரியா வளர்க்கலேன்னு என்னை திட்ட மாட்டாங்களா" என்று நை.. நை.. புகைச்சல் காதில் விழும்போதெல்லாம் உச்சத்தின் எரிச்சலுக்கு என்னை இட்டு சென்றது..

இன்று

*சாம்பார் சூப்பர்,*

*வத்தக்குழம்பு சூப்பர்*

என்று அடுத்தவர் என்னை பாராட்டும்போதுதான் அந்த குடைச்சலின் பெருமை துளிர்த்து எட்டி எட்டி பார்த்தது! மெல்ல என் மர மண்டைக்கு விஷயம் ஏற ஆரம்பித்தது..

*இதிலும் நான்தான் தோற்று போனேன்*.

இருந்தாலும் இந்த அம்மாவுக்கு இவ்வளவு கல்நெஞ்சம் இருக்கக்கூடாது.. அப்போதுதான்

*நூடுல்ஸ் வந்த புதிது..*

அதன் மீது அப்படி ஒரு பிரியம் வந்துவிட்டது.. ஒருநாள் அதை வாங்கி சாப்பிட 5 ரூபாய் கேட்டால்கூட என் அம்மா கறார்தான்.. தர முடியாது என்ற ஒற்றை வார்த்தையை அழுத்தமாக சொல்லிவிட்டார்..

*உங்க சமையல் வெறுப்பா இருக்கும்மா, நூடுல்ஸ்தான் வேணும்*

என்று அழுதாலும் ஒரு பதிலும் அங்கு வரவே வராது..

5 ரூபாய் தராத அம்மா எல்லாம் ஒரு அம்மாவா? என்று நொந்து போய் அழுதடியே அன்று தூங்கிவிட்டேன்.

மறுநாள் காலை தூங்கி எழுந்தால், வீட்டுக்கு வந்த பாத்திர வியாபாரியுடன் அம்மா பேசி கொண்டிருந்தார். அந்த வியாபாரி கையிலும், சுற்றிலும் புதுபுது பாத்திரங்கள் கண்ணை கூசின.

*ஆமா.. எல்லா பாத்திரத்திலயும் என் பொண்ணு பேர் பெரிசா பொறிச்சிடுங்க..*

செலவு பத்தியெல்லாம் கவலைப்படாதீங்க என்று சொல்லி கொண்டிருந்தார்.. இன்று வரை ஒரு டம்பளரில் தண்ணீர் எடுத்து குடித்தாலும் அதில் உள்ள என் பெயர் என்னை குத்தி காட்டி கொண்டே இருக்கிறது.

*ஏனோ தெரியவில்லை, இப்போதுவரை நூடுல்ஸ் சாப்பிடும் எண்ணமும் எனக்கு வரவே இல்லை*.

இந்த விஷயத்திலும் நான்தான் தோற்று போனேன்!!

ஓயாத குடைச்சல், எப்பவுமே திட்டு, எப்பவுமே ஒரு அட்வைஸ், எதுக்கெடுத்தாலும் ஒரு பிளாஷ்பேக், அம்மா எப்பவுமே இப்படித்தானோ என்ற நினைப்பு இளம்வயதில் வந்தபடியே இருந்தது.

நான் பிரசவ வார்டில் இருந்தபோது, *அம்மா* என்று எத்தனை முறை கூப்பிட்டிருப்பேன் என்றே தெரியாது, குழந்தையை பெற்று கொண்டு வீடு வந்து சேர்ந்ததும் அவர் ஒரு நிமிடம் சும்மா இல்லையே..

இதை சாப்பிடு

அதை சாப்பிடாதே

இதை குடி

இப்படி திரும்பு

அப்படி படு,

குழந்தையை இப்படி பிடிச்சு தூக்கு

என்று சொல்லி கொண்டே இருந்தார். அவ்வளவு காலம் இல்லாமல், அம்மாவின் வயிற்றில் தழும்புகள், வடுக்களை அப்போதுதான் பார்த்தேன்.. பிரசவ போரில் நான் தந்த பரிசு போலும்.. நடுமண்டையில் சுரீரென்று எனக்கு உரைத்தது.. அம்மா எப்பவும் போலவேதான் இருக்கிறார்.. நான்தான் ஒவ்வொன்றிற்கும் எரிச்சல், குடைச்சல், என டிசைன் டிசைனாக பெயர் வைத்து கொண்டு இருந்திருக்கிறேன் என்று!!

*இப்போதும் நான்தான் தோற்றேன்!*

என் மகள் குட்டி தேவதை போலவே இருப்பாள் என்று கற்பனை செய்து கொண்டு, தையல் மிஷினில் கைத்தறி துணியில் பாவாடை தைத்து உடுத்தி அழகு பார்க்கும்போதுகூட, எனக்கு கண்ணில் பட்டது என்னவோ அதில் தொங்கி கொண்டும், ஒட்டிக் கொண்டும் இருந்த கலர் கலர் நூல்கள்தான்.. "இந்த டிரஸ் நல்லா இல்லைம்மா, நூல் நூலா தொங்குது.. இதை பார்த்தா என் பிரண்ட்ஸ் கிண்டல் செய்வாங்கன்னு" தைத்த 2 நிமிசத்துலயே கழற்றி முகத்தில் எறிந்த நிகழ்வின் காலம் உருண்டாலும் இன்னமும் வலித்து கொண்டே இருக்கிறது.

"இவ்ளோ பெரிய பெண்ணாகியும் இன்னும் ரிப்பன் வைத்து சடை பின்னிக்க தெரியலயா, என்ற அம்மா திட்டிய அதே வார்த்தைகளை இன்று என் மகளிடம் என்னையும் அறியாமல் சொல்வது வியப்பாக உள்ளது! எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என் அம்மா!! இந்த விஷயத்திலும் நான்தான் தோற்று நிற்கிறேன்.

ஏனோ தெரியவில்லை.. என்னை பார்க்கும்போதெல்லாம் ஓயாமல் சொல்லும் பொய்

*ஏன் இப்படி இளைச்சிட்டே, ஏன் இப்படி கறுத்து போயிட்டே* என்பதுதான்..

*தட்டில் சட்னி மீதமிருக்குது பாரு, அதுக்காக இன்னும் ஒரே ஒரு தோசை*

என்று சாக்கு சொல்லி சுடச்சுட சுட்டுப்போடும் அலாதியே இன்றும் தனி அழகுதான்.. சாப்பிட்டு முடித்த பிறகு தான் தெரியும் சட்னியை முன்கூட்டியே தட்டில் அதிகமாக ஏன் வைத்தார் என்று?

அந்த அன்பின் சூட்சுமம்கூட தெரியாமல்

*அப்போதும் நான்தான் தோற்று நிற்பேன்!!*

எத்தனை விஷயத்தில்தான் நான் இப்படி தோற்று கொண்டே இருப்பேனோ தெரியாது.. இந்த தொடர் தோல்வி எனக்கு பிடித்திருக்கிறது.. காரணம், என் அம்மா சளைக்காமல் வெற்றி பெற்று கொண்டே இருப்பதால்!!!

*உலகின் தலை சிறந்த முதல் தியாகி அம்மா மட்டுமே*

சொக்கி போகும் முதல் உலக அழகிகளும் இவர்களே!!

உலகின் மிக பெரிய பொருளாதார மேதையுமே அம்மா மட்டுமே!!

*எத்தனை இடர்பாடுகள்*,

*எத்தனை துயரங்கள்,*

*எத்தனை வலிகள்*

வந்தால் என்ன?

உலக உருண்டையில் கலந்துவிட்ட இந்த தாய்மையானது அனைத்தையும் புரட்டி போட்டு கொண்டு மேலே சென்று கொண்டே இருக்கும்!!

எல்லா அம்மாக்களுக்கும் சமர்ப்பனம்!!


Saturday, May 2, 2026

Amma !!

 


மத்திய பிரதேசத்தின் நர்மதா நதியில் சுற்றுலா சென்றபோது படகு கவிழ்ந்த விபத்தின் செய்தியை நாமெல்லாம் அறிந்தோம்.

டெல்லியில் இருந்து வந்த அந்த நால்வர் கொண்ட குடும்பத்தில், தந்தையும் மகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆனால், அந்த தாயும் நான்கு வயது மகனும் உயிரிழந்தார்கள்.

நேற்று காலை மீட்பு பணியாளர்கள் அவர்களின் உடல்களை கண்டுபிடித்த போது, அந்த காட்சியை பார்த்த அனைவரின் கண்களும் நீர்த்தது.

அந்த தாயின் கைகள், மரணம் வந்தாலும் கூட, தனது குழந்தையை மார்பிலிருந்து பிரிக்கவில்லை!

நீரில் மூழ்கி மூச்சு விட முடியாமல் தவித்த அந்த கடைசி நொடிகளிலும், தன் உயிரைப் பற்றி அல்ல — தனது குழந்தையை எப்படி இருந்தாலும் காப்பாற்ற வேண்டும் என்பதையே அவள் நினைத்தாள்.

எவ்வளவு பெரிய ஆபத்து வந்தாலும், ஒரு தாயின் முதல் மற்றும் கடைசி எண்ணம் தனது குழந்தைகள்தான் என்பதை இந்த சம்பவம் மீண்டும் நிரூபிக்கிறது.

கடைசி மூச்சு வரை, தனது குழந்தைக்கு ஒரு சின்ன சேதமும் ஏற்படாதபடி, அவள் அவனை இறுக்கமாக அணைத்துக்கொண்டிருந்தாள். அவனை காப்பாற்ற முடியாமல் போயிருக்கலாம்… ஆனால், மரணத்தின் அந்த குளிரில் அவனை தனியாக விட அந்த தாய்மனம் சம்மதிக்கவில்லை. இறுதியாக மரணத்தை நோக்கிச் செல்லும்போதும், தனது மார்பின் சூட்டை அவனுக்கு அளித்து அவனை அணைத்துக்கொண்டிருந்தாள்.

இந்த உலகில் மாற்றிக்கொள்ள முடியாத உணர்வு ஒன்று இருந்தால் அது தாயின் அன்பு மட்டுமே என்பதை இந்த கண்ணீர் காட்சி நமக்கு மீண்டும் நினைவூட்டுகிறது. அந்த தாயுக்கும் குழந்தைக்கும் கண்ணீருடன் அஞ்சலி…

உயிர் தப்பிய தந்தைக்கும் மகளுக்கும் இந்த மிகப்பெரிய துயரை தாங்கும்

 வலிமையை இறைவன் வழங்கட்டும். 🙏

courtesy : Quorq

Sunday, July 20, 2025

Amma !!!!!!!!!!!!!

 சுகப்பிரசவம் எப்படின்னு கேள்விப்பட்டிருப்பீர்கள். 🤰

எழுத்தால் படித்து பார்த்து கண் கலங்கியதுண்டா?

இதைபடியுங்கள்!!! 🤱

மனது கலங்கும்..!!😥

முதலில் வலபக்க இடுப்பில் சுரீரென்ற குத்தல், பின்னர் இடைவெளி விட்டு மீண்டும், இடைவெளி விட்டு மீண்டும், இப்படியே தொடர்ந்து நடு வயிறு வலி ஆரம்பிக்கும் போது குழந்தை, தான் பிறக்கப் போகும் நேரத்தை முடிவு செய்துவிட்டது என்று அர்த்தம்...

புதிய உலகை காண வேண்டும் என்று குழந்தைகள் முடிவு செய்த பின், அதற்கு முதலில் இது வரை வாழ்ந்து வரும் கருவறை உலகில் தனக்கான வாழ்வாதரத்தை அழிக்கும் பனிக்குடத்தை அது உடைக்கும். அங்குதான் குழந்தை சுவாசிக்கும், நீந்திகொண்டிருக்கும்.

அதை உடைத்த பின் புதிய வாழ்வாதாரத்திற்கான வழி நோக்கி முன்னெடுக்கும் போது பிரசவ வலி உச்சத்தில் இருக்கும். (முழு பனிக்குட நீரும் வெளியேறும் முன் மருத்துவமனை சென்றுவிட வேண்டும்) மொத்த வயிறும் வலிக்கும், சீராக சுவாசிக்க முடியாது. அதிக பதட்டம், இந்த நேரத்தில் பெண் வேண்டுவதல்லாம் கணவனின் கரத்தை இறுகப் பற்றுதல் தான். அந்த நேரத்தில் வேறு யாரையும் தேடாது புருஷன் புருசன் புருசன் மட்டும்தான்.

முதலில் இனிமா கொடுத்து வயிற்றை சுத்தம் செய்வார்கள். ஏற்கனவே வயிறு வலி, இதுல இது வேற. இப்ப கால் இரண்டையும் விரித்து வைத்துக் கொள்ளச் செய்வார்கள். அப்போது வலி முதுகுத்தண்டை தாக்க ஆரம்பித்திருக்கும். எப்படி என்றால் கத்தியை எடுத்து முதுகுதண்டின் டிஸ்க்களுக்கு இடையில் சொருகினாள் எப்படி இருக்குமோ அப்படியான வலி. ஒரு நர்ஸ் நெஞ்சு மேல் ஏறி வயித்த பார்க்க உக்காந்து தன்னோட இரண்டு கால் முட்டுகளால் மேல்வயிற்றின் இரண்டு பக்கங்களில் இருந்தும் அழுத்தம் கொடுக்கும். கைகளால் மேல் வயிற்றை கீழாக தள்ளும்.

டாக்டர் முக்கு முக்குன்னு சொல்வார்கள், சீசேரியனில் மட்டும்தான் மயக்க மருந்து கொடுத்து பிரசவம் நடக்கும். அது சீசேரியன் கத்திய வச்சி அறுப்பாங்க அப்பறம் தையல் எல்லாம் போட வேண்டுமே அதனால் என்கின்றீர்களா? நிற்க சுகபிரசவத்திலும் தையல் போட வேண்டும் அது வயிற்றில் கிடையாது பிறப்புறுப்பு ஒரு குறிப்பிட்ட அளவிற்க்கு மேல் விரிவடையாத சூழல் இருக்கும் போது. கத்தரிப்பான் போன்ற தோற்றத்தில் தேங்காய் உரிக்கும் உபகரணம் பார்த்து இருக்கிறீர்களா? தேங்காயில் அதன் கூர்மையான முனை கொண்டு ஒரு குத்து குத்தி இரண்டாக பிளக்க வேண்டும். அதே மாதிரி ஒரு உபகரணம் கொண்டு பிறப்புறப்பில் செலுத்தி அதன் கைப்பிடியை விரித்து ஒரு திருக்கு.

அங்கயே கண்ணுரென்டும் சொருகிடும் செத்தே போய்டுவோம்னு தான் தோணும். ஆனா குழந்தையாட தலை வெளில தெரிது Push push push ன்னு சொல்ல, “டாக்டர் முடியல டாக்டர்” என்பாள். ஏம்மா உனக்கு வலிக்கிர மாதிரி தான் உன் குழந்தைக்கும் வழிக்கும் அதோட வலியை குறைக்கனும்னா நீ சீக்கிரம் முக்கி பிள்ளைய பெத்துக்கனும் அப்பறம் உன் இஷ்டம் னு சொல்லுவாங்க அப்போ வரும் ஒரு வெறி பாருங்க, நரம்புகள் முருக்கி உடம்பின் ஒட்டுமொத்த சக்தியையும் திரட்டி ஓரிடத்தில் குவித்து முப்பது நொடி அளவில் நீண்ட முக்குதல் முக்கி பிறப்புறுப்பை கிழித்துக்கொண்டு குழந்தை வந்து விழும்.

என்ன குழந்தை என்று சொல்லிய பின் குழந்தையை குளிப்பாட்ட கொண்டு போயிடுவாங்க. ஹப்படா என்று நிம்மதியில் கொஞ்சம் ஆசுவாசம் அடையும் போது கிழிந்த பிறப்புறப்பை டாக்டர் தைக்க ஆரம்பித்து இருப்பார். எது வரை உறுப்பு கிழிந்து இருக்கும் தெரியுமா? மலத்துவாரத்தின் மேற்பகுதி வரை. இந்த டாக்டர் அப்பயும் மயக்க ஊசி போடமாட்டார். அதெல்லாம் கொடுமையிலும் கொடுமை. அப்பறம் பெட் எல்லாம் மாத்தி புதுசா வார்ட் ரூம்ல கூட்டிட்டு போயி விட்ருவாங்க. Actually தூக்கிட்டு போயி குழந்தைக்கு பால் கொடுக்கனும்..

அந்த பச்சை குழந்தைக்கு கண்ணும் முழிச்சு இருக்காது பாலும் எப்படி உறுஞ்சி குடிக்கனும்னும் தெரியாது ஆனா பசில அழும் பார்க்கவே பாவமா இருக்கும். பாலை கொஞ்சம் பீச்சி அதோட வாய்ல விட்டுட்டு காதை தடவி கொடுத்தா உரிஞ்சி குடிக்க ஆரம்பிச்சிடும். இன்று வரைக்கும் தீராத ஆச்சரியமாக இருக்கிறது அது எப்படி காதை தடவினா உரிஞ்சு குடிக்க தோனுதுன்னு? எது எப்படியோ என்னிலுருந்து பிறந்த என்னுயிர் இன்னொருநான் எனக்கான பசியை என்னிடமே தீர்த்துக் கொள்வது போல இருக்கும் அந்தக் குழந்தையின் பால் குடித்தல். அது வரை உடல் அனுபவித்த கஷ்டங்களுக்கு மனதின் பாரம் குறையும்.

படிக்கும் போதே மனது கண்ணீரில் நனைகிறதா? அப்படியானால் இதை தாங்கும் பெண்...?🤰🤱

உண்மையில் தலையில் தூக்கி வைத்து கொண்டாடபட வேண்டிய ஓர் ஜீவன் என்றால் அது தாய்தான். 🤱அவளை கடைசி வரை ஒரு குழந்தையாக பார்த்து கொள்வது ஒவ்வொருவர் கடமை... 🥺🥺

Sunday, June 18, 2023

Ammaa - Balakumaran

 அம்மா ஒரு ப்ராண ஸ்நேகிதி - பாலகுமாரன்

டாக்டர் மெல்ல அணைத்துக் கொண்டு என்னை ஓரமாக நகர்த்திக் கொண்டு போனார். “எல்லாம் முடிந்துவிட்டது. இருந்தாலும் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்” என்று சொன்னார்.
தேவகி ஆஸ்பத்திரியில் நிறைய கார்கள் நின்றிருந்தன. நடுவே நான் அழுது கொண்டு நின்றேன். இது திங்கட்கிழமை ஐந்தேகால். ஞாயிற்றுக்கிழமை ஐந்தேகாலுக்கு அவள் எங்களோடு டைனிங் டேபிளில் உட்கார்ந்து உற்சாகமாய்ப் பேசிக்கொண்டிருந்தாள்.
“கார்த்தால ஒரு நர்ஸ் வந்தாளே அவ பேர் என்ன?”
“சாவித்ரி. ஜெனரல் ஆஸ்பத்திரி” நான் பதில் சொன்னேன்.
“எப்போ கூப்பிட்டாலும் வரேன்னு சொல்லியிருக்கா. எனக்கு ஏதாவது தேவையா இருந்தா நான் கூப்டுக்கலாமா” ஒரு பர்மிஷன் கேட்பது போல் என்னிடம் பேசினாள்.
சாவித்ரி என் வாசகி. தன் புருஷனோடும், குழந்தைகளோடும் என் வீட்டிற்கு வந்து அம்மாவை நமஸ்காரம் செய்து சகல உதவிகளும் செய்வதாகத் தெரிவித்தார்.
“இதுக்கு முன்னால ஒரு பொண்ணு வந்தாளே. உன் கையைப் பிடிச்சுண்டு ஓன்னு அழுதாளே. எதுக்கு அழுதா?”
“நிறைய மனவேதனைகள் சுத்தி இருக்கறவா எல்லாம் நிறைய தொந்தரவு பண்றாங்க” என்று நான் பதில் சொன்னேன்.
“ஜாக்கிரதையா பார்த்துக்கோடா. உன்னால என்ன முடியுமோ, அத்தனை உதவி செய். அவ அழறபோது எனக்கு வயறு கலங்கிடுத்து. வேற யாரோன்னு விட்டுடாம உன்னால என்ன முடியுமோ அத்தனையும் செய்” அம்மா கட்டளைபோல் சொன்னாள்.
அம்மா ஒரு வார்த்தை சொன்னாள். “பாலகுமாரன் எதையும் துறக்காத துறவி” என்று திடீரென்று சொன்னாள். வீடு வாய்விட்டுச் சிரித்தது.
“என்ன… என்ன அர்த்தம் அதுக்கு. சொல்லு எதையும் துறக்காத துறவின்னா அது என்ன?” என்று என் மகள் ஸ்ரீ கௌரி பிலுபிலுவென்று பிடித்துக்கொள்ள அம்மாவுக்கும் சிரிப்பு வந்தது.
“அவன் துறவிதான். ஆனால் அவன் எதையும் துறக்க வேண்டிய அவசியமில்லை. அவனைச் சுற்றி எது நடந்தாலும் அவன் துறவியாகத்தான் இருப்பான்” என்று சொன்னாள்.
என் வீடு தொடர்ந்து அதைக் கேலி செய்தது.
நான் சதாசிவ பிரும்மேந்திராள் பற்றிய ஒரு மாத நாவலில் எழுதி இருந்தேன். பலமணிநேரம் ஒரு முறைக்கு, இரு முறை அந்த நாவலைப் படித்தாள்.
மடித்து வைத்துவிட்டு மறுபடியும் அதை எடுத்துப் படிப்பாள். மறுபடியும் மூடி வைத்துவிட்டு கண்மூடிக் கிடப்பாள். மறுபடியும் எடுத்துப் படிப்பாள்.
“எப்படியிருக்கு நாவல்” நான்தான் வலிய போய் கேட்டேன்.
“ரொம்ப நன்னாயிருக்கு. ரொம்ப நன்னாயிருக்கு. எத்தனை அற்புதமா எழுதற. எத்தனை பேருக்குச் சொல்லித் தர. உன்னை நினைச்சா எனக்குப் பெருமையா இருக்கு” என் கையை, நெற்றியை, மார்பை, தலையைத் தடவிக் கொடுத்தாள்.
இடது கையில் யார் தோளையாவது பிடித்துக்கொண்டு, வலது கையில் வாக்கிங் ஸ்டிக்கை ஊன்றிக்கொண்டு டைனிங் டேபிளிலிருந்து சோபாவுக்குப் போவாள். மரண நேரத்துக்கு முதல் நிமிடம் வரை நடமாடிக் கொண்டிருந்தாள்.
பேசிக்கொண்டிருந்தாள். சிரித்துக் கொண்டிருந்தாள். புலம்பிக் கொண்டிருந்தாள். படுத்துக் கொண்டிருந்தாள். சட்டென்று ஐந்தே நிமிடத்தில் காணாமல் போனாள்.
நான் ஐந்து வருடம் முன்பு காசிக்கும், கயாவுக்கும் போய்விட்டு வந்ததை காஞ்சிப் பெரியவர் ஸ்ரீ ஜெயேந்திரரிடம் விவரித்தேன்.
“குஜராத்ல ஒரு கயா இருக்கு தெரியுமோ. பெற்ற தாயாருக்கு மட்டும் ஸ்ரார்த்தம் பண்ற ஒரு இடம் இருக்கு தெரியுமோ” என்று ஜெயேந்திரர் வினவினார். தெரியாது என்றேன்.
“அந்த ஸ்ரார்த்த மந்திரம் சிலது இருக்கு. உனக்குச் சொல்றேன்.” ஸ்ரீ ஜெயேந்திரர் என்னை அருகே அழைத்து எனக்கு மட்டும் கேட்கும்படி தமிழில் ஒரு விளக்கம் சொன்னார்.
“தாயே, என்னைக் கருவில் ஏற்றபோது நீ உடம்பு வேதனைப்பட்டிருப்பாயே, அதற்காக இந்த ஜல தர்ப்பணம் செய்கிறேன். நான் கருவில் உருவாகி வளர்ந்தபோது நீ வாயில் எடுத்து உணவு செரிக்காமல் அவஸ்தைப்பட்டிருப்பாயே, அதற்காக இந்த ஜல தர்ப்பணம் செய்கிறேன்.
தாயே என்னை வளர்ப்பதற்காக நீ விரும்பிய விரும்பாத எல்லா உணவையும் என் பொருட்டு எடுத்துக் கொண்டாயே, அதற்காக இந்த ஜல தர்ப்பணம் செய்கிறேன்.
தாயே நான் வளர்ந்து வரும் நேரத்தில் உன்னால் சுமக்க முடியாமல் பெருமூச்சு விட்டு, இங்கும் அங்கும் அலைந்தாயே, அந்த வேதனைக்காக ஜல தர்ப்பணம் செய்கிறேன்.
நீ போகவேண்டிய இடங்களுக்குப் போகாமல், அப்படிப் போனால் எனக்குக் கடினம் என்று சொல்லி வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்து எல்லா ஆசைகளையும் துறந்துவிட்டு, என் மீதே கவனமாக இருந்தாயே, அதற்காக இந்த ஜல தர்ப்பணம் செய்கிறேன்.
நான் வெளியே உருவெடுத்து வந்தபோது உன்னுடைய உதிரம் பெருக்கெடுத்து ஓடியிருக்குமே, அதற்காக ஜல தர்ப்பணம் செய்கிறேன். வலியில் அலறி இருப்பாயே அதற்காக ஜல தர்ப்பணம் செய்கிறேன்.
நான் வாயால் கடித்து உறிஞ்சும் போது உன் மார்புக் காம்புகள் வலித்திருக்குமே அதற்காக இந்த ஜல தர்ப்பணம் செய்கிறேன். என் அழுகுரல் கேட்டதும் ஓடோடி வந்து தூக்கினாயே அதற்காக உனக்கு ஜல தர்ப்பணம் செய்கிறேன்.
நான் பிறந்த பிறகு எனக்கு பால் கொடுக்க வேண்டுமென்பதற்காக வேண்டாததை விலக்கி, வேண்டியதை மட்டும் உண்டாயே, அதற்காக நான் ஜல தர்ப்பணம் செய்கிறேன்.
நான் உன் மடியில் மல, மூத்திரம் செய்தேனே அந்த துர்வாசனை வேதனைகளைப் பொறுத்துக் கொண்டாயே, நான் இரவிலே அழுது மற்றவர்கள் ஏச நீ எழுந்து என்னைச் சமாதானப்படுத்தி, மற்றவர்கள் ஏச்சைப் பொறுத்துக் கொண்டாயே அதற்காக ஜல தர்ப்பணம் செய்கிறேன் என்று,
ஐம்பத்தைந்து விதமான அவஸ்தைகளை ஜெயேந்திரர் சொல்ல எனக்கு மனம் ஆடிப்போனது.
திருவான்மியூர் மகாதேவ தீர்த்தத்தில் கல் ஊன்றி, கை மறித்து, கட்டை விரல் வழியாக அவள் தாக சாந்திக்காக ஜலம் விடும்போது எனக்கு இந்த ஐம்பத்தைந்து அவஸ்தைகள்தான் ஞாபகம் வந்தன.
அம்மா என்பது உடம்பல்ல, அம்மா என்பது சுலோசனா அல்ல. அம்மா என்பது மோனஹன் பெண்கள் உயர்நிலைப்பள்ளி தமிழ்ப் பண்டிதை மட்டுமல்ல. அம்மா என்பது இந்த உலகத்தை அரவணைத்துக் கொண்டிருக்கிற ஒரு உணர்ச்சி.
அம்மா என்பது உலகத்திலுள்ள எல்லாப் பெண்களிடமும் இருக்கிற ஒரு சக்தி. அம்மா என்பது மழை பொழிய காத்திருக்கும் குளிர் மேகம். அம்மா என்பது உலகைக் குளிர்வித்துக் கொண்டிருக்கிற தாவர சக்தி.
அம்மா என்பது உலகிலுள்ள அத்தனை உயிர்களையும் தாங்கிக் கொண்டிருக்கின்ற பூமியின் பலம்.
அம்மா, நாள் தவறாது என் சத்குருநாதன் யோகிராம்சுரத்குமார் அவர்களின் பெயரைச் சொல்லிக் கொண்டிருந்தாள். நாள் தவறாது, எங்களுடைய குடும்ப கூட்டுப் பிரார்த்தனையில் பாடிக் கொண்டிருந்தாள்.
எந்த அவஸ்தையுமில்லாமல் பூ உதிர்வதுபோல் என் சத்குருநாதன் யோகிராம்சுரத்குமார் அவர்களின் தாமரைப் பாதங்களில் சேர்ந்து கொண்டாள்.
குருவைப் பற்றிச் சொல்லும் பொழுதெல்லாம் அம்மாவின் ஞாபகமும், அம்மாவை நினைக்கும் பொழுதெல்லாம் குரு என்ற ஒரு உணர்வும் ஏற்படும்.
யார் என் முன் அழுதாலும், யார் வேதனைப்பட்டாலும், அவர்கள் கைகளைப் பற்றிக் கொண்டு ஆறுதல் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறதோ, அப்பொழுது எனக்கருகே என் அம்மா நிச்சயம் இருக்கிறாள். ஆசீர்வாதம் செய்கிறாள்.
என் அம்மா ஒரு ஒரு நல்ல ஸ்நேகிதி. எனக்கு மட்டுமில்லை. எல்லோருக்கும்.